Saturday 3 October 2020

வேற்றுமையில் ...... ஒற்றுமை.......?

ஒரு காலத்துல ஊரு உலகத்துல நடக்குற நல்லது, கெட்டத தெரிஞ்சுக்கிறதுன்னா ஒன்னு செய்தித் தாள் படிக்கணும்;  இல்லையின்னா ரேடியோ பொட்டி கேக்கணும்.  அதுவும் அப்பல்லாம் அந்த செய்தி சராசரி மனுசனுக்கு போயிச்  சேர்றதுக்கு கொஞ்சம் காலமாகும்.  ஆனா, இப்ப அப்படியா இருக்கு; ஒலகத்தோட ஒரு மூலையில நடக்குறது நொடியில  நமக்கெல்லாம் வந்து சேந்துருது.  எதுக்கு இந்த வியாக்கியானம்னா, சில பல வருஷத்துக்கு முன்னால இந்த அமெரிக்காவுலே ஒரு தொ(ல்)லைக் காட்சியில, சாமானியப்பட்ட குடிமக்கள் சில பேருட்ட ஒரு கேள்வி கேட்டாங்க.  அதாவது, "U" அப்படிங்குற எழுத்துல ஆரம்பிக்கிற நாடுகளோட  பேர சொல்லுங்கன்னு.  நெறையப்  பேரு  உகாண்டா, உஸ்பெஸ்கிஸ்தான், உருகுவே, உக்ரைன் அப்படின்னு சொல்லுறான்.  கொஞ்சம் பேரு "U" ல ஆரம்பிக்கிற நாடே கெடையாதுங்கிறான்.  ஆனா, 1%  மட்டும்தான் United States of America-ங்கிற பேரைச் சொன்னான்.  அதாவது, சாமானியனப் பொறுத்தவரைக்கும் அவன் நாட்டோட பெரு America தான்.  இப்ப எதுக்கு இந்த அமெரிக்கா பத்தின சமாச்சாரம் அப்டிங்கிறத  கடேசியில பாப்போம்.  

நம்ம நடராஜன் அண்ணாச்சி கிட்ட சில வருஷம் முன்னாடி பேசிட்டு இருக்கும்போது, அவரு ஒரு வாரத்துல ஆஸ்திரேலிய குடி உரிமைக்கான பரீட்சை அவரும், அவரு வீட்டு அம்மிணியும் எழுதப் போறதா சொன்னாரு.  ஆஸ்திரேலியா சரித்திரம் பத்தி கேள்வி பதில் இருக்கும்னு சொன்னாரு.  நல்லா படிச்சிருக்கீங்களா, ரொம்ப கஷ்டமா இருக்கான்னு கேட்டேன்.  அவரு சிரிச்சுக்கிட்டே ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு இருக்குற நம்ம இந்தியா பத்தியே படிச்சு பரீட்சை எழுதிருக்கோம்;  இதென்ன நானூத்தி சொச்சம் வருஷ வரலாறப்   படிக்கிறது பெரிய விஷயமான்னு கேட்டாரு.  அதென்னமோ உண்மைதான்.  ஆஸ்திரேலியா அப்படிங்கிற நாட்டோட ஆதி குடிகள் வரலாறு ஒன்னு இருந்துருக்கும்.  அவங்க தென்னிந்தியா அல்லது இலங்கையில இருந்து சில பல ஆயிரம் வருஷத்துக்கு (உத்தேசமா ஐம்பதாயிரம் வருஷம்) முன்னால இந்த கண்டத்துக்கு வந்துருக்க வாய்ப்பு இருக்கலாம் அப்படின்னு இன்றைய ஆராய்ச்சியாளர்கள் சொல்லுறாங்க.  அப்படிப்பட்ட ஆதி குடிகள் - பழங்குடிகளுக்குன்னு ஒரு வலுவான வரலாறு நிச்சயம் இருந்திருக்கும்.  ஆனா, முதன் முதலா வந்த ஐரோப்பிய குடியேறிகள் அந்த வரலாறுக்கான ஆதாரங்களையெல்லாம் அழிச்சிருக்கணும்னு தோணுது.  இன்னைய தேதிக்கு ஆஸ்திரேலியா கலாச்சாரம் முழுக்க, முழுக்க ஐரோப்பிய கலாச்சாரமாதான் இருக்கு.  அதோட சாதக, பாதகங்கள பத்தி பேசுறது இந்த பதிவோட நோக்கம் கெடையாது.  அதுனால, இப்போ இருக்கிற அரசாங்கமும், அரசியல்வாதிகளும் பழங்குடி மக்களோட உரிமைகளுக்கு முன்னுரிமை குடுக்குறதா சொல்லுறாங்க. அது மட்டுமில்லாம, இன்னைக்கும் உலகத்தோட பல்வேறு நாடுகள்ல இருந்து குடியேறும் மக்களுக்கு அவங்களோட கலாச்சாரம், மொழி எல்லாத்தையும் கட்டிக் காக்கவும், அதை பின்பற்றி வாழவும் முழு சுதந்திரம் குடுக்கப்பட்டிருக்கு.  அதாவது நூத்தித் தொண்ணூத்தஞ்சு நாடுகளோட கலாச்சாரம் மற்றும் மொழி இந்த நாட்டுல கலந்து இருக்கு. 

ஏறக்குறைய ஆஸ்திரேலியா மாதிரியே வரலாறுதான் அமெரிக்காவுக்கும்.  குடியேறிகளின் நாடு;  ஆதி குடிகளை - அவர்களின் வரலாற்று ஆதாரங்களை நிர்மூலமாக்கி கொலம்பஸ் காலெடுத்து வைத்த நாளிலிருந்து மட்டுமே அமெரிக்காவின் வரலாறு எழுதப்படுகிறது.  அத்தகைய பெருமைகள் மிகுந்த அமெரிக்க அதிபரின் நண்பர், ஆவணப்படுத்தப்பட்ட ஒரு நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறாரே என்ற ஆதங்கம்தான் இந்தப் பதிவின் நோக்கம்.  அதாங்க நம்ம ஜி .........

பெருமையா சொல்லிக்கிறோமே Unity in Diversity - அதான் தலைப்பிலே சொன்ன வேற்றுமையில் ஒற்றுமை,  அதை  அடித்து நொறுக்கும் நோக்கத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஒரே தேசம், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று திணித்தல் என்ன நியாயம்.  மாற்றுக் கருத்து கொண்டோர் வாய் திறந்து பேசக் கூடாது என்ற சர்வாதிகாரிகளை இந்த உலகம் கண்டிருக்கிறது.  ஆனால், மாற்றுக்  கருத்து கொண்டோரே இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கம் தற்போதைய அரசின் பிரதான கொள்கையாக இருக்கிறது.  நம்ம ஜி தலைமை அமைச்சராக ஆனதுக்கப்புறம் நடப்பவை  மட்டுமே வரலாறாக எழுதப்பட வேண்டும் அப்படிங்கற நல்ல நோக்கத்தில், முந்தைய ஆட்சியாளர்களை கொச்சைப்படுத்தலும், உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஆவணப்படுத்துவதும், தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  ஒன்று தெரியுமா, இன்று திறந்து வைக்கப்படும் அடல் குகைப் பாதை 2010-ல் அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் ஆரம்பித்து வைத்தது என்பது எங்காவது சொல்லப்படுகிறதா?  இவ்வளவு ஏன், கீழடி தொல்பொருள் ஆராய்ச்சியை முடக்க எத்தனை குட்டிக் கரணம் அடித்தது ஜி அரசு என்பதை நாம் கண்கூடாக பார்த்தோமே.  மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் எத்தனை வித்தை காட்டினார்கள்.  பொருளாதாரத்தை நாசமாக்கி, கோடிக் கணக்கானோரின் வாழ்வாதாரத்தை அழித்து மார் தட்டிக் கொண்டாடுகிறது இந்த கையாலாகாத அரசு.  அம்பானி கொரோனா காலத்திலும், ஒரு மணி நேரத்துக்கு தொண்ணூறு கோடி சம்பாதிக்கிறாராம்.  அதே அம்பானி பிரான்ஸ் நாட்டில் பட்ட கடனை கட்டித் தீர்க்கத்தான் ரபேல் விமானம் அதன் அடக்க விலையை விட பல மடங்கு அதிகமாக கொட்டிக் கொடுக்கப்பட்டது என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்.  ஆஸ்திரேலிய வங்கிகள் கடன் கொடுக்க மறுத்த பின்னும், அதானி இன்னும் சுரங்க வேலையை தொடரும் மர்மம் என்ன.  (என்ன பெரிய வெங்காய மர்மம்.  இந்திய வங்கிகள் சுரண்டி எடுக்கப்பட்டது).  ஆனாலும், அதானி தோண்டி எடுக்கும் நிலக்கரி நேரடியாக இந்தியாவுக்கு விற்கப்படாது என்பது ஏன்.  நிலக்கரி முதலில் இந்தோனேசியாவில் இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டு, அங்கிருந்துதான் இந்தியாவுக்கு விற்கப்படும் என்ற உண்மை ஏன் மறைக்கப்பட்டது. 

😡😡😡  சொல்லணும்னா, சொல்லிக்கிட்டே போகலாம் மக்களே.  ஏற்கனவே ரொம்ப பெரிசாயிருச்சு பதிவு.  முடிஞ்ச வரைக்கும் இதையெல்லாம் அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்களுக்கு எடுத்துட்டுப் போங்க.  இன்னும் நா......லு வருஷம் இருக்கே.




1 comment:

  1. எல்லாமே கொஞ்ச காலம்தான். ஹிட்லர் ஆடிய ஆட்டம் வெறும் 12 ஆண்டுகள் மட்டுமே. (1933-45) அப்புறம் தன்னையே சுட்டுட்டு இறந்துட்டான். இந்த மோடி அலையும் கொஞ்ச நாளைக்குத்தான். எதுவும் தானாகவும் நடக்காது. ஹிட்லர் எதிர்த்தும் உலக நாடுகள் எல்லாம் போராடின. அன்று ஹிட்லரை எதிர்த்த போரில் லட்சக்கணக்கில் சோவியத் வீரர்கள் தியாகம் செய்தனர். மோடியும், சங்கிககளும் ஒரு நாள் விரட்டப்படுவர்.

    ReplyDelete