Thursday 18 November 2021

ஆஞ்ஞான்

 எங்க ஆஞ்ஞான் கடைசி மூச்சு காத்துல கலந்து இன்னியோட அஞ்சு நாளாச்சு.  மனுச மனசுக்கு தெரியுதா; சாயந்திரம் நாலு மணியானா கையி அலைபேசி எடுத்து பிசைய ஆரம்பிக்கிது - ஆஞ்ஞானோட பேச.  ஈமக்கிரியைக்கு கெடத்தியிருந்த  ஆஞ்ஞான் உருவம் மனசவிட்டுப் போக மாட்டேங்கிது.  அப்படியே எந்திரிச்சு உக்காந்திரமாட்டாகளான்னு அப்ப துடிச்ச மனசு இன்னும் அப்படியே  துடிக்கிது.   

கனவு காணுறது வெற்றிக்கான முதல் படின்னு சொன்னாரு கலாம்;  ஆனா நான் இப்ப காணுற கனவுலயெல்லாம் ஆஞ்ஞான்தான் இருக்காக;  அவுக நெனப்பு மூச்ச முட்டும்போதெல்லாம், ஒவ்வொரு நொடியவும் முழுங்க முடியாம தவிக்கிறேன்.  

மனசும், கனவும்தான் ஆஞ்ஞானை சுத்திக்கிட்டு இருக்குது;  உடம்போ  எட்டாத தூரத்துல இருக்கு.  

கால எந்திரம் கண்டுபிடிச்சவுக யாராவது இருந்தா சொல்லுங்க;  நான் பொறந்தப்ப எங்க ஆஞ்ஞான் எப்படியெல்லாம் என்னை கொஞ்சியிருப்பாகன்னு பாக்கணும்.  எங்கள ஆளாக்க அவுக எம்புட்டு தூரம் சைக்கிள் மிதிச்சாகன்னு பாக்கணும். 

ஆறுதல் சொல்ல ஆயிரம் பேரு  இருந்தாலும் அவுக இல்லைங்கிற காயம் ஆற எவ்ளோ நாளாகும்னு தெரியல;  காலம்கிற மருத்துவன்கிட்ட என்னை ஒப்படைச்சிட்டேன்.  வேறென்ன சொல்றதுன்னு தெரியல.  ஆறுதல் சொன்னவுகளுக்கும், அவசர நேரத்துல உதவி பண்ணவுங்களுக்கும் நன்றி.

(ஆஞ்ஞான் என்ற சொல் தந்தையை விளிக்கும், ஏறக்குறைய இரண்டு தலைமுறைகளுக்கும் முன்னால் வரை வழக்கத்திலிருந்த ஒரு தமிழ் சொல்)  

அக்னி கலசம்?

 கான முயலெய்த அம்பினில் யானை 

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

ஜெய் பீம் திரைப்படம் பார்த்த பொது இந்தக் குறள்தான் நினைவுக்கு வந்தது.  பாதிக்கப்பட்ட செங்கேணியிடம் காவல்துறைத் தலைவர்  (டி.ஜி.பி.?) பேரம் பேசும்போது அந்தப் பெண் கூறும் பதில், "போராடித் தோத்துப் போயிட்டேன்னு பெருமையா சொல்லிக்கிறேன்.  ஆனா கொலைகாரன் குடுக்குற காசுல எம் பிள்ளைகளை வளக்க மாட்டேன்".   

பொதுவாக  இந்த முன்னணி நடிகர்கள், ஒரு படத்துல நடிக்கும் போது முடிந்த வரைக்கும் தங்களோட நாயகப் பகட்டுக்கு பங்கம் வராதவாறு பாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.  உண்மைக்கு அருகில் சென்று ஒரு பாத்திரம் செய்த விதத்தில் நடிகர் சூர்யா நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.   அதையும் மீறி ஒரு சில இடங்களில் நாயகத்துதி இருப்பினும், அதுவும் அடக்கியே  வாசிக்கப்பட்டிருக்கிறது.  சமுதாயத்தால்  புறந்தள்ளப்பட்ட ஒரு சமூகம்/அதுவும் சாதி அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு பிரிவினரை, அதிகார வர்க்கம் எப்படி நடத்தும் என்பதை முதல் ஒரு சில காட்சிகளிலேயே சொல்லி ஒரு பெரிய தாக்கத்திற்கு நம்மை இந்த இயக்குனர் தயார் செய்து விடுகிறார்.  காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்து எத்தனையோ முறை படித்தும், கேள்விப்பட்டும் இருக்கிறோம்.  சமீபத்திய உதாரணம் - இதற்க்கெல்லாம் உதாரணம் சொல்ல வேண்டுமா என தெரியவில்லை.  தூத்துக்குடி சம்பவம் நமக்கு மிக அருகாமையில் நடந்தது;  யோகியின்(?) உத்தரப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிணத்தை காவலர்களே எரித்தது அதிகாரத் திமிரின் உச்சம்.  இதையெல்லாம் கடந்து, காவல் நிலைய சித்திரவதைகளை நம்மை அருகிருந்து பார்க்கும் ஒரு உணர்வைக் கடத்தியிருப்பதில் இயக்குனர் வெற்றி பெற்றுவிட்டார்.  உண்மைச்  சம்பவம் போலவே வழக்கறிஞர் சந்துரு அந்தப் பெண்ணுக்கு/கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவுக்கு நீதி பெற்றுத்  தந்துவிட்டார்.  ஆனால், இந்தப் பதிவின் நோக்கம் இந்தத் திரைப்படத்தை விமர்சிக்கும் நோக்கமில்லை.  நம்ம சின்ன மா(ங்கா)ம்பழம்  மருத்துவ(அன்பு)மணியின் அரசியல் அசிங்கம் பற்றிப்  பேசுவது.

போன தேர்தலிலேயே/அவர்களே பெருமையாக சொல்லிக்கொள்ளும் வன்னியர் பெல்ட்டில்  குப்புற விழுந்து மண்ணைக் கவ்விய சின்ன மா(ங்கா)ம்பழம், ஒரு வழியாக குறுக்கு வழியில் மாநிலங்கவையில் நுழைந்து விட்டது.  நுழைந்தது, நுழைந்ததுதான்;  அதன் பிறகு எத்தனை முறை அந்த பாராளுமன்றக்  கூட்டத்துக்குப் போனது என்பதை ஏறக்குறைய எல்லா ஊடகங்களும் கழுவி ஊற்றி விட்டன.  அது போக எடுபிடி அரசிடம் கெஞ்சிக் கூத்தாடி பெற்ற 10.5% இட ஒதுக்கீட்டுக்கும் நீதிமன்றம் பெப்பப்பே சொல்லிவிட்டது.  இப்படி எல்லாராலும் மறக்கப்பட்ட/புறந்தள்ளப்பட்ட மா(ங்கா)ம்பழம் எப்படியாவது பேசு பொருளாகிவிடவேண்டும் என்ற ஆத்திரத்தில், வாக்கு வங்கி  அரசியல் நடத்தும் நோக்கில் ஜெய் பீம் திரைப்படத்தை கையில் எடுத்தது சின்ன மா(ங்கா)ம்பழம்;  புலிவால் பிடித்தவன் போல ஆகிவிட்டது வலியப்போய் கையில் எடுத்த விஷயம்.  இப்போது சின்ன மா(ங்கா)ம்பழம் நோக்கி பல்வேறு தரப்பினரும் கொடுக்கும் எதிர்க்குரல் பார்த்தால், அடுத்த தேர்தலில் சின்ன மா(ங்கா)ம்பழம் தேர்தல் வைப்பு நிதியை (deposit) இழக்கும் நிலை வரலாம் என்று தோன்றுகிறது.  அப்படி ஒன்று நடந்தால் அது ஒரு விதத்தில் தமிழகத்தின் சாதி அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டின் முதல் அடியாக இருக்கும்.

வழக்கம் போல ஒரு சந்தேகம் வந்துவிட்டது.  அக்னி கலசம் - இந்த வார்த்தையில் 'க்' வருமா, வராதா?  தயவு செய்து யாராவது சந்தேகம் தீர்க்க வேண்டுகிறேன்.  அப்படி உங்கள் யாருக்கும் தெரியாவிட்டால், தயவுசெய்து சின்ன மா(ங்கா)ம்பழத்திடம் கேட்டுச்  சொல்லுங்கள்.

Friday 17 September 2021

புகைப்படம்

 "இந்த  காமரால எத்தன படம் எடுக்க முடியும்.  என்ன பிலிம் போடணும்",னு வைத்திலிங்கம் அண்ணாச்சி கேட்டாக.  அண்ணாச்சி ஒரு வெள்ளந்தி மனுசன்.  அந்தக் காலத்துல - ரொம்ப காலமெல்லாம் இல்ல, ஒரு முப்பது வருஷம் முந்தி வரைக்கும் ஓடிட்டு இருந்த திருவள்ளுவர் போக்குவரத்துக்கு கழகத்துல ஓட்டுனரா இருந்தவுக.  நாலு ஊரு பாத்துவுக; விதவிதமான மனுசங்களப் பாத்தவுக.  அப்படியிருந்தும் ஒரு மனுசன் எப்படி வெள்ளந்தியா இருக்க முடியும்னுதான் எனக்கு ஆச்சரியம்.  அவுக இப்படி கேட்டது பத்து வருசத்துக்கு முன்னால.  இப்ப அவுக இல்ல; தவறிட்டாக.  

"இல்ல அண்ணாச்சி, இது டிஜிட்டல் கேமரா.  இதுல பிலிம் கெடையாது.  இந்த ஒரு சின்ன கார்டு தான்.  சுமாரா 300 போட்டோ எடுக்கலாம்", னு நான் சொன்னதும் அவுகளுக்கு அம்புட்டு ஆச்சரியம்.  இப்பம் ஏன் திடீருன்னு அவுக நெனப்பு வந்துச்சுன்னா, பிபிசி-யில Antique Road Show அப்படின்னு ஒரு நிகழ்ச்சி.  நேத்து அதுல சுமார் 70 வருசத்துக்கு முன்னால ராணி எலிசபெத் II பதவி ஏத்துக்கிட்டத ஒரு மனுசன் போட்டோ புடிச்சிருக்கான்.  அந்த போட்டோ இப்பம் அவனோட வாரிசு ஒருத்தருகிட்ட இருக்கு.  அந்த போட்டோ எல்லாம் இப்போ எத்தனையோ மில்லியன் டாலருக்கு வெல போகும்னு அதப் பத்தி பேசிக்கிட்டு இருந்தாய்ங்க.  ஏற்கனவே சொல்லிருக்கேன்னு நெனைக்கிறேன்.  மனுச மனசு ஒரு குரங்குன்னு.  இருந்திருந்தாப்புல எங்கெங்கேயோ ஓடும்.  அப்படித்தான் போட்டோ பத்தி நெனைக்க ஆரம்பிச்சதும் வைத்திலிங்கம் அண்ணாச்சி ஞாபகம்.  

அதோட நின்னா பரவாயில்லை; அதையும் தாண்டி போய்க்கிட்டே இருக்கு.  இன்னைக்கி பாத்தா எல்லார் கையிலயும் போன் இருக்கு;  அதுல நெனச்ச நேரத்துல போட்டோ எடுக்கலாம்.  ஏன் விடியோவே எடுக்கலாம்.  ஆனா, நான் படிக்கிற காலத்துல ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க என்னென்ன அக்கப்போருல்லாம்  நடக்கும்னு நெனச்சுப் பாக்குது இந்த மனசு.  பள்ளிக்கூடத்துல படிக்கிறப்ப பஸ் பாஸ் வாங்கணும்னா கண்டிப்பா பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும்.  அதுக்கு ஒரு பெரிய ஆராய்ச்சி நடக்கும்;  அக்கம் பக்கத்துல எந்த ஸ்டூடியோ இருக்கு, அதுல போட்டோ எடுக்க என்ன விலை.  போட்டோ எடுத்தா நெகடிவ் சேத்து  குடுப்பாய்ங்களா;  ஏன்னா நெகடிவ் இருந்தா அதுலேயிருந்து தேவைப்படும்போது போட்டோ எடுத்துக்கலாம்.  இல்லையின்னா, ஒவ்வொரு தடவையும் புதுசா போயி ஸ்டூடியோ கதவை தட்டணும்.  இதுல இன்னொரு பிரச்சனை என்னன்னா, போட்டோ எடுத்து சில சமயம் ஒரு வாரம் வரைக்கும் ஆகும் நம்ம கைக்கு வர்றதுக்கு.  ஏன்னா அந்த ரோல் முழுக்க எடுத்து முடிச்சப்பறம்தான் பிரிண்ட் போடுவாங்க.  

கேப்ரோன் ஹால் பள்ளிக்கூடம் முன்னாடி ஜி.ஆர்.மணி ஸ்டுடியோ இருக்கும்; இன்னைக்கும் இருக்குதான்னு தெரியல.  அந்த ஸ்டுடியோ போனா அங்க இருக்கிற அண்ணன்  நல்லா பளிச்சுன்னு போட்டோ எடுத்துக் குடுப்பாருன்னு எல்லாரும் சொல்லுவாய்ங்க.  அவரு தலை நெறைய எண்ணெய் தேச்சுக்கிட்டு வந்தா போட்டோ எடுக்க மாட்டாரு.  அப்படி இருந்தா முடி நரைச்சாப்பல தெரியுமாம்.  அதே மாதிரி வேர்வையோட போனாலும், பின்னாடி இருக்கிற பாத்ரூமுல முகத்த கழுவி, பவுடர் போட்டு வந்தாத்தான் போட்டோ எடுக்குற படலமே  ஆரம்பிக்கும்.  முகத்த நேரா வையி; கண்ண சுருக்காத; அப்படி சாயி, இப்புடி நேரா நில்லுன்னு ஒரு வழி பண்ணித்தான் போட்டோ எடுப்பாரு.  ஆனா, நான் அவருகிட்ட ஒரு தடவைதான் போட்டோ எடுத்திருக்கேன்.  ஏன்னா அவரு 4 ரூவா 50 காசு வாங்குவாரு.  அது போக அவரு நெகடிவ் குடுக்க மாட்டாரு. இந்த ஓம் ஸ்டுடியோ இருக்கு பாருங்க, அதான் இந்த அரசரடியில மாடியில இருக்குமே, அங்க 4 ரூவாதான்.  அதுவும் போக நெகடிவ் குடுத்துருவாங்க.  

இப்படித்தாங்க, ஒன்னு மேல ஒண்ணா நெனப்பு அடுக்கிக்கிட்டே போகுது.  அப்பல்லாம் வீட்டுப் பின்னாடி நின்னு பாத்தா விளாங்குடி ஸ்டேஷன் தெரியும்; போற, வார எல்லா ரயிலும் தெரியும்.  அந்த ரயிலு என்ஜின் பின்னாடி கோத்துக்கிட்டு வரிசையா போற பெட்டிங்க மாதிரி ஒவ்வொரு நெனப்பா தொரத்திக்கிட்டே வருது.  

போட்டோ பத்தில்லாம் இவ்வளோ பேசிட்டு சும்மா போக முடியுமா.  அதான் போறதுக்கு முன்னால ரெண்டு புகைப்படம். 

இது உலகப் புகழ் பெற்ற  ஒரு புகைப்படம்.  அமெரிக்க அண்ணாச்சி செஞ்ச அக்கிரமங்களுக்கு ஒரு சாட்சி.



இந்த போட்டோக்கு விளக்கம் குடுத்தா என்னய அதிகப்பிரசங்கிம்பீங்க;  இல்லன்னா ஆன்டி இந்தியன்னு சொல்லுவீங்க.  அதுனால, NO COMMENTS.

எங்கே என் சினார் வாசம்.

நம்ம வாசிப்பில் எங்கேயோ, எப்போதோ வாசித்த ஒரு கட்டுரையோ அல்லது ஒரு கவிதையோ நம்மை எங்கோ இழுத்துச் செல்லும்.  நம்முடைய ஒரு சூழ்நிலைக்கு அது அப்படியே பொருந்தும்.  இந்த கவிதையை எழுதியவனும், அதை மொழி பெயர்த்தவனும், அதை எனக்கு அறிமுகம் செய்தவனும் இப்போது எனக்கு அருகாமையில் இல்லை; ஆனாலும் அவன் நெய்த இந்த கவிதை என்னை அசைத்துப் பார்க்கிறது.  

காஷ்மீரத்து இளைஞன் அவன்; தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தை சூழ்ந்த இனிய குடும்பம் அவனது.  காலம் செய்த கோலங்கள் விசித்திரமானவை;  போராளிகளாலும்/தீவிரவாதிகளாலும் அவர்களை ஒடுக்க முயலும் அரசு எந்திரத்தினாலும் அவன் தனது மண்ணை விட்டு நகர்கிறான் - குடும்பத்துடன்.  

காலம் எப்போதும் ஒன்றே போலிருக்காதல்லவா?  அவன் நகர்ந்த மண்ணிலும் அவன் உழைத்துப் பிழைக்க ஓர் உத்தியோகம் கிடைக்கிறது.  ஆனால், அவன் தாய் நோய் வாய்ப்படுகிறாள்.  மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான்.  மருந்துச் சீட்டு தரப்படுகிறது,

                "சினார் மர வாசங்கள் நிறைந்த தென்றல் போதும்;
                    சினார் மரப்பூக்கள் நிரம்பிய பாதையில் பயணிக்க வேண்டும்."

கான்க்ரீட் காடுகளுக்குள் சினார் மரங்களை எங்கு தேடுவதென்று தெரியாமல் அந்த மகன் அழுகிறான்.

இப்போது ஒரு கண்ணுக்குத்  தெரியாத ஓர் எதிரியால் என் கால்கள் கட்டப்பட்டிருக்கின்றன;  என் சினார் 5626 மைல் தொலைவில் இருக்கிறது.  அது இயற்கையாய் உருவானதோ அல்லது செயற்கையாய் உருவாக்கப்பட்டதோ - கொரோனா என்ற நுண்ணுயிரி என்னை....................

Friday 23 July 2021

ஒலிம்பிக் 2032

ஒலக சினிமா, ஒலக சினிமான்னு எல்லாரும் பேசுறத, எழுதுறத பாத்தா ரொம்ப பயமா இருக்கும்.  நம்ம மண்டைக்கெல்லாம் எட்டாத விஷயம்னுதான் இப்ப வரைக்கும் ஒதுங்கிப் போயிட்டிருந்தேன்.  ஆனா பாருங்க கெரகம்,  நம்மள மாதிரியே எழுதுற ஒரு மனுஷன் சினிமா பத்தி எழுதியிருந்தாரா, நமக்கும் நமநமன்னு அரிக்கும்ல.  அப்பிடி ஒரு அரிப்புல பாத்த படம்தான்  DOWNFALL.  பேரு  இங்கிலீஷிலே இருந்தாலும் படம் என்னவோ ஒரு ஜெர்மன் படம். 

படம் பூரா ஜெர்மனியிலதான் பேசியே கொல்லுறாய்ங்க;  நல்லவேளை இங்கிலீஷிலே SUBTITLE இருக்கு.  இணையத்துலயே கிடைக்குது.  அடால்ப் ஹிட்லரோட வீழ்ச்சி, அதைத் தொடர்ந்து அவரோட தற்கொலை பத்தி பேசுற படம்.  இல்லல்ல, இந்தப் படம் பேசல;  நாம பக்கத்துலயே உக்காந்து அந்த நிகழ்வுகளை பாக்குற ஒரு அனுபவம். அவரோட கடைசி நாட்களை மட்டும் படமாக்கிருக்காங்க. சரித்திரம் தெரிஞ்ச எல்லாருக்கும் ஹிட்லர் எப்படி தோத்தாரு, எப்படி செத்தாருங்கிறது தெரியும்.  நமக்கில்லைங்க;  இந்தப் படத்தைப் பாத்துதான் அதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்.  நம்ம அறிவுக்கு எட்டுன வரைக்கும் ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி; ஜெர்மனிய ஆட்சி பண்ணுனாரு; நாஜி மார்க்கத்துல பற்று உள்ளவரு; யூதர்களை கூட்டம், கூட்டமா கொன்னாருன்னு மட்டும் தெரியும்.  இரண்டாம் உலகப் போருல சோவியத் யூனியன் கிட்ட தோத்துப் போயி தற்கொலை பண்ணிக்கிட்டாரு அப்படிங்கிற அளவுக்குத் தெரியும்.  

ஒரு சர்வாதிகாரிய எதுத்து யாரும் பேசவே மாட்டாங்கன்னு நம்பிக்கிட்டிருக்கிற என்னய மாதிரி முட்டாளுக்கு ஒரு நல்ல பாடம் இந்தத்  திரைப்படம்.  பெர்லினை சோவியத்  படைகள் நாலா  பக்கமும்  சூழ்ந்து நிக்கிது; கொஞ்சம், கொஞ்சமா ஹிட்லரோட முடிவு நெருங்கி வருது.  ஹிட்லர் மற்றும் அவர் குடும்பம், அவரோட தளபதிகள் உட்பட முக்கியமானவர்கள் அரண்மனையோட அடியில் உள்ள, ஒரு ரகசிய பாதாள அறையில - அதை அறைன்னு சொல்லுறது தப்பு - சகல வசதிகள் கூடிய ஒரு சிறு அரண்மனை.  அங்கதான் பதுங்கி இருக்கிறாங்க.  நாளுக்கு நாள், எதிரி நெருங்கி வர்ற நிலையிலயும் ஹிட்லர் தாறுமாறான உத்தரவுகள் கொடுக்கிறாரு; சொந்த நாட்டு மக்களும் கூட தனக்காக, தன்னுடைய கொள்கைகளுக்காக உயிர் தியாகம் செய்யணும்னு சொல்றாரு; தன்னுடைய நாட்டு மக்கள் சாவது குறித்து எந்தக் கவலையும் இல்லைன்னு சொல்றாரு; கூட இருக்கிற தளபதிகளோ உண்மை நிலையை எடுத்து சொல்லுறாங்க; ஒரு சிலர் சரணடையவும், வேறு சிலர் தப்பி பிழைத்து ஓடவும் முடிவெடுக்கிறாங்க.  அவங்க ஒவ்வொருத்தரையும் கோழைகள் அப்படின்னு திட்டி அவங்களுக்கு மரண தண்டனையும் கொடுக்கிறாரு.  கோயபெல்ஸ், மற்றும் அவர் மனைவி ரெண்டு பேரும்  நாஜி மார்க்கம் மற்றும் ஹிட்லர் மேலிருக்கிற மரியாதை காரணமாகவும், தங்களுடைய குழந்தைகள் நாஜி மார்க்கம் தவிர  எந்த ஒரு சூழ்நிலையிலயும் வளரக் கூடாதுன்னு முடிவெடுத்து தங்களுடைய ஆறு குழந்தைகளையும் கொல்ல  முடிவெடுக்கிறாங்க.  இவ்வளவு களேபரத்துலயும், ஹிட்லர் - ஈவா திருமணம் நடக்குது.  மறுநாள் காலை உணவுக்குப் பின் ஹிட்லரும், ஈவாவும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செஞ்சுக்கிறாங்க.  கோயபெல்ஸ் மனைவி ஆறு குழந்தைகளுக்கும் சயனைடு ஊட்டி கொல்லுறாங்க.  மனைவியை சுட்டு கொன்னுட்டு, கோயபெல்ஸ் தன்னையும் சுட்டுக்கிறாரு.  ஹிட்லரோட மெய்க்காப்பாளர், அவரோட உத்தரவுப்படி, ஹிட்லர் மற்றும் ஈவா ரெண்டு பேரோட உடலையும் பெட்ரோல் ஊத்தி கொளுத்துறாரு. 

படிக்கிறவுங்க யாராவது தலைப்பை கவனிச்சிருந்தா, "என்னடா, ஒலிம்பிக் 2032 அப்படின்னு தலைப்பு வச்சுட்டு வேற கதை வுடுற", அப்படின்னு கேட்கலாம்.  தயவு செஞ்சு முழுசா படிங்க மக்களே.

மனம் ஒரு குரங்குன்னு சும்மாவா சொன்னாங்க.  ஏதோ ஒரு நாட்டுல, ஏதோ ஒரு காலத்துல நடந்த கதையை சினிமாவாக்கி குடுத்துருக்காங்கன்னு பாக்க ஆரம்பிச்சா, இந்த குரங்கு மனம் இந்த படத்தோட காட்சி எல்லாத்தையும் நம்ம ஜி கிட்ட கொண்டு போயி ஒப்பிட்டுப் பாக்குது.  இந்த பண மதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கு எல்லாத்தையும், எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாம அறிவிச்சப்ப, நாட்டு மக்கள் என்ன பாடுபட்டாலும், கவலை இல்லை; நடந்தே செத்தாலும், பசியால் செத்தாலும்  கவலையில்லை அப்படிங்கிற ஹிட்லர் மனநிலையில் அறிவிச்சிருப்பாரோ அப்படின்னு யோசிக்கிது.  ஹிட்லருக்கு அவரோட தளபதிகள் சில பேரு  உண்மை நிலையை சொல்லி அறிவுரை சொல்லும்போது அவருக்கு வர்ற கோபமும் சீற்றமும் பாக்கும்போது ஒருவேளை அமைச்சரவையில யாராவது உண்மை பேசுனா - அப்படி யாராவது சொல்லுவாங்களா, பேசுவாங்களான்னு சந்தேகம் - என்ன நடக்கும்னு தாறுமாறா சிந்திக்கிது.  

இப்போ தலைப்புக்கும் கட்டுரைக்கும் (கதைக்கும்) என்ன சம்பந்தம்னா:

2032 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு;  முக்கியமான சமாச்சாரம் என்னன்னா ஏறக்குறைய போட்டியே இல்லாம இந்த தேர்ந்தெடுப்பு நடந்துருக்கு.  இந்த  விஷயம் நம்ம ஜி காதுக்கு போயிருந்தா - அவரோட தளபதிகள் யாராவது அவருக்கு சொல்லிருந்தா - நான் வர்றேன் போட்டிக்கு.  காசியில ஒலிம்பிக் நடத்துவோம்.  கங்கையில் படகுப் போட்டி, நீச்சல் போட்டி.  குஜராத்துல  கட்டுன மாதிரி சுவர் கட்டுவோம்  அப்படின்னு என்னவெல்லாம் காமெடி பண்ணிருப்பாரு, இந்த சந்தடில PEGASUS குழி தோண்டி புதைச்சிருப்பாரு அப்படின்னு குண்டக்க, மண்டக்க யோசனையெல்லாம் தலைக்குள்ள ஓடுது மக்களே.  பாகிஸ்தான்ல இருந்து டுரோன் வர்ற கதையெல்லாம் தேவையில்லாம போயிருக்கும்.

கடைசியா நீதிமான்களாகிய நீங்கள் எனக்கு ஒரு தீர்ப்பு சொல்லணும்.  இன்னைக்கி காலையில மளிகை சாமான் லிஸ்ட் எழுதும்போது கொண்டைக்கடலை எழுதச் சொன்னாங்க வீட்டம்மா.  நம்ம கை, நம்ம கட்டுப்பாட்டை இழந்து நிர்மலா சீதாராமன் அப்படின்னு எழுதிருச்சு.  இது ஒரு குத்தமா மக்களே.  இன்னும் திட்டு வாங்கிட்டு இருக்கேன்.😞😞😞