எங்க ஆஞ்ஞான் கடைசி மூச்சு காத்துல கலந்து இன்னியோட அஞ்சு நாளாச்சு. மனுச மனசுக்கு தெரியுதா; சாயந்திரம் நாலு மணியானா கையி அலைபேசி எடுத்து பிசைய ஆரம்பிக்கிது - ஆஞ்ஞானோட பேச. ஈமக்கிரியைக்கு கெடத்தியிருந்த ஆஞ்ஞான் உருவம் மனசவிட்டுப் போக மாட்டேங்கிது. அப்படியே எந்திரிச்சு உக்காந்திரமாட்டாகளான்னு அப்ப துடிச்ச மனசு இன்னும் அப்படியே துடிக்கிது.
கனவு காணுறது வெற்றிக்கான முதல் படின்னு சொன்னாரு கலாம்; ஆனா நான் இப்ப காணுற கனவுலயெல்லாம் ஆஞ்ஞான்தான் இருக்காக; அவுக நெனப்பு மூச்ச முட்டும்போதெல்லாம், ஒவ்வொரு நொடியவும் முழுங்க முடியாம தவிக்கிறேன்.
மனசும், கனவும்தான் ஆஞ்ஞானை சுத்திக்கிட்டு இருக்குது; உடம்போ எட்டாத தூரத்துல இருக்கு.
கால எந்திரம் கண்டுபிடிச்சவுக யாராவது இருந்தா சொல்லுங்க; நான் பொறந்தப்ப எங்க ஆஞ்ஞான் எப்படியெல்லாம் என்னை கொஞ்சியிருப்பாகன்னு பாக்கணும். எங்கள ஆளாக்க அவுக எம்புட்டு தூரம் சைக்கிள் மிதிச்சாகன்னு பாக்கணும்.
ஆறுதல் சொல்ல ஆயிரம் பேரு இருந்தாலும் அவுக இல்லைங்கிற காயம் ஆற எவ்ளோ நாளாகும்னு தெரியல; காலம்கிற மருத்துவன்கிட்ட என்னை ஒப்படைச்சிட்டேன். வேறென்ன சொல்றதுன்னு தெரியல. ஆறுதல் சொன்னவுகளுக்கும், அவசர நேரத்துல உதவி பண்ணவுங்களுக்கும் நன்றி.
(ஆஞ்ஞான் என்ற சொல் தந்தையை விளிக்கும், ஏறக்குறைய இரண்டு தலைமுறைகளுக்கும் முன்னால் வரை வழக்கத்திலிருந்த ஒரு தமிழ் சொல்)