Saturday 17 October 2020

படம் பார்த்து கதை சொல்.

சமீபத்துல நம்ம ஜி அவரோட  சொத்து மதிப்பை வெளியிட்டிருக்காரு.  அவரோட சொத்து மதிப்பு முப்பத்தாறு லட்சம் கூடியிருக்காம்.  அவரு ரொம்ப புத்திசாலித்தனமா அவரோட முதலீட்டை கையாண்டதால அந்த மதிப்பு கூடிருக்குன்னு இந்த National Tamil Daily அப்படின்னு தன்னைத் தானே புகழ்ந்துக்குற அந்த செய்தித் தாள் சொல்லிருக்கு.  தன்னோட சொந்த முதலீட்டை அப்படி வளத்தவரு ஏன்யா நாட்டோட பொருளாதாரத்தை அம்போன்னு விட்டுட்டாருன்னு கேக்கக்  தோணுது.  ஆனா, அந்தக் கேள்வி இந்த பதிவோட நோக்கமில்லை.  மேலும், தன்னோட சொத்து மதிப்புல  அவரு அந்த மயிலு, வாத்து பத்தியெல்லாம் ஒண்ணும் சொல்லல.  அதைப் பத்தி கேக்குறதும் நோக்கமில்லை.  பின்ன எதைப் பத்தி இந்த பதிவுன்னா........

இப்பம் கொஞ்ச நாளைக்கு முன்னால OTT ல வந்து, விமரிசனம் பண்ணுறோம்கிற எல்லோரும் அடிச்சுத் தொவச்சு தொங்க விட்ட க/பெ ரணசிங்கம் அப்படிங்கிற திரைப்படம் பத்தி ஒரு சில வார்த்தைகள் பேசலாம்னு,

ஒரு தோழர் இந்த படத்தை ஒரு முஸ்லீம் நாட்டுக்கு எதிரான, இந்துத்துவ ஆதரவு திரைப்படம்னு சொல்லிருந்தாரு.  ஆனா, அவரு சொன்ன மாதிரி அந்த நாட்டுக்கு எதிரான எந்த கருத்தும் அந்த திரைப்படத்துல சொல்லல.  அந்த விபத்து நிகழ்ந்த எண்ணெய் கிணறு முஸ்லீம் நாட்டுல இருக்கிறதா சொல்லப்பட்டாலும், அதோட மொத்த நிர்வாகமும் பெரியண்ணன் அமெரிக்காகிட்ட இருக்கிறதாதான் சொல்லிருக்காரு அந்த கதை சொல்லி. ஒரு காட்சியில இந்திய தூதரக அதிகாரியா வர்ற கதாபாத்திரமும் அப்படித்தான் சொல்லுது. அதுவுமில்லாம இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னால, ஒரு முஸ்லீம் நாடு தன்னோட நாட்டை சேர்ந்த, அரசுக்கு ஏதிரான கருத்து சொல்லிட்டு வந்த ஒருத்தர தூதரகத்துல வச்சே கொலை செய்ஞ்சதா வந்த செய்தியையும் நாம கவனத்துல எடுத்துக்கணும்.  மொத்தத்துல, அது எந்த அரசாங்கமும் தனக்கு எதிரான எந்த கருத்தையும், ஆதாரத்தையும் ஒடனே அழிக்கறதுல மும்முரம் காட்டும் அப்டிங்கிறதுல மாற்றமில்லை.  சமீபத்திய இந்திய உதாரணம் ஹத்ராஸ்.

இந்த எடத்துல அந்த திரைப்படத்தோட கதையை சுருக்கமா பாத்துட்டா, மேற்கொண்டு படிக்கிறவங்களுக்கு கொஞ்சம் புரியும்.  இந்த நம்ம கீழத்தூவலூர்  இருக்கே - அதாங்க நம்ம ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவலூர். அந்த ஊருக்காரரு ரணசிங்கம் கொஞ்சம் சம்பாதிச்சு, தன்னோட குடும்பத்தை பொருளாதார ரீதியா முன்னேத்திரணும்னு வளைகுடா நாட்டுக்கு வேலைக்கு போறாரு.  அங்க நடந்த ஒரு விபத்துல அவரு செத்துப் போறாரு.  அவரோட உடம்பும் கிடைக்காத நிலையில, அங்க நடந்த விபத்தை ஒத்துக்கிட்டா பெரிய அளவுல நஷ்ட ஈடு குடுக்கணும்ங்கிறதால, என்னன்னவோ பொய்யச் சொல்லி உடல் குடுக்கிறத தவிர்க்கப் பாக்குது அந்த எண்ணெய் நிறுவனம்/அமெரிக்க நிறுவனம்.  ஆனா, ரணசிங்கத்தோட மனைவி அரியநாச்சி கணவரோட உடலை வாங்குறதுக்கு நடத்துற போராட்டம்தான் கதை.  (மக்களே, கொஞ்சம் நீளமாத்தான் போகுது பதிவு.  ஆனா வேற வழியில்லை.  கொஞ்சம் பொறுமையா படிங்க)

அரியநாச்சி போற எடத்துல எல்லாம் - அது சென்னையானாலும், டெல்லியானாலும் - அவுங்களுக்கு உதவி பண்ணுறதுக்கு யாராவது இருக்காங்களே எப்படி;  அது சினிமாத்தனமா இருக்கு அப்படிங்கிற விமரிசனங்களை தாண்டி வேற ரெண்டு காட்சிகளை மட்டும் பாக்கணும் அப்படின்னு தோணுது.  நம்ம ஊறுகா மாமியும், ஜியும் அரியநாச்சிக்கு உதவி(?) பண்ணுறதா காட்சி அமைச்சிருக்காரு கதை சொல்லி.  இந்த ரெண்டு காட்சியும்தான் ஒருவேளை இந்த திரைப்படம் சங்கி ஆதரவு திரைப்படமோ அப்படிங்கிற சந்தேகத்தைக் கிளப்புது.  கொஞ்சம் உன்னிப்பா பாத்தா அந்தக் காட்சி ரெண்டும் வஞ்சப்புகழ்ச்சி பாணியிலே அமைச்சிருக்காரு இயக்குனர்.  உதாரணமா ஊறுகா மாமியோட convoy  முன்னால போயி விழுகுது இந்தப் புள்ள அரியநாச்சி.  ஊறுகா மாமி அந்தப் புள்ளயோட ஒரு selfie எடுத்து ட்விட்டர்ல செய்தி போடுறாங்க.  ஏம்பா, அவங்களே ஒரு ஒன்றிய/மத்திய அமைச்சர்;  அவங்க நேரடியா சம்பந்தப்பட்ட அமைச்சர்கிட்ட பேசினா என்ன அப்படின்னு ஒரு சாமானியனான என் மூளைக்கே தோணுது.  ஆனா, மாமிக்கு அவங்களுக்கான விளம்பரம்தான் முக்கியமே தவிர, அரியநாச்சியோட கோரிக்கையை நிறைவேத்துற நோக்கமே இல்லைங்கிற உண்மையை இங்க மறைமுகமா சொல்லிருக்காரு கதை சொல்லி.

அணையை திறந்து வைக்க வர்றாரு நம்ம ஜி.  அங்க தன்னந்தனியா - மன்னிக்கணும் - கைக்குழந்தையோட போராட்டத்துல இருக்குது இந்தப் புள்ள.  ஏம்பா, ஜி மாதிரி ஒரு தலைவரு வாராரு;  பாதுகாப்பு ஏற்பாட்டுல இவ்ளோ பெரிய ஓட்டையான்னு கேக்கப்பிடாது.  மஹாபலிபுரத்துல, அவரு எடுக்கணும்னே குப்பையை போட்டு வச்சவய்ங்கதானே நம்ம சங்கிகளோட மனோபாவம். 

இந்தப் புள்ளைக்கு உதவி பண்ணுறதுக்காக, அங்கேயே ஒரு நாற்காலி போட்டு உக்காருறாரு நம்ம ஜி.  ஒடனே, நம்ம ஜி அவ்ளோ நல்லவரா; இல்ல சங்கி பிரச்சாரமா அப்படின்னு எல்லோருக்கும் தோணும்.  எனக்கும் தோணுச்சு.  உண்மையில நம்ம ஜிக்கு ஒரு கேமரா பாத்தாலே கை, கால் நகராது;  அது முன்னால நின்னு போஸ் குடுக்க ஆரம்பிச்சுருவாரு.  இங்க பாத்தா, எத்தனை கேமரா இருக்குது;  அந்த ஒவ்வொரு கேமரா லென்சுக்கு பின்னாலயும் எத்தனை கோடி கண்ணு பாத்துக்கிட்டு இருக்கு;  அந்த விளம்பரத்தை அவ்ளோ சீக்கிரம் விட்டுருவாரா நம்ம ஜி.  அதான், அங்கேயே ஒரு நாற்காலி போட்டு உக்காந்துட்டாரு.  நம்ம ஜி க்கு ஒரு ராசி இருக்குது; அவரு தலையிட்டால் அது அப்புறம் பெப்பே பெப்பப்பேதான்.  சோலி சுத்தமா முடிஞ்சுரும்;  சந்தேகமிருந்தா சந்திரயான் திட்டமே நல்ல உதாரணம்.  இன்னைக்கு வரைக்கும் அந்த விண்கலம் என்னாச்சுன்னே தெரியல.  அதேதான், இந்தத் திரைப்படத்திலேயும்  நடக்குது.  மொத்தத்துல சோலி முடிச்சு சுத்தமா கழுவி விட்டுட்டாரு நம்ம ஜி.  ஒருவேளை  அந்தப் படம் பாக்காதவங்க இருந்தா கதையோட முடிவை சொல்லி அந்த சஸ்பென்ஸை உடைக்க விரும்பலை.  

இந்த லட்சணத்துல, OTT ல வெற்றியடைஞ்ச இந்த திரைப்படத்தை, உள்ளூர் திரையரங்குலயும் வெளியிடப் போறாங்களாம்.  தணிக்கை குழு பாத்து சான்றிதழ் குடுத்துருச்சாம்.  தணிக்கை குழுவுல இருக்குற அத்தனை பேரும் வாத்து வளக்குற கூட்டம்தான் போலிருக்கு.  அதான் சான்றிதழ் குடுத்துருக்காய்ங்க.  மொத்தத்துல நாலாயிரம் பேரு நீட் தேர்வு எழுதி, அதுல எண்பத்தெட்டாயிரம் பேரு தேர்ச்சி பெற்ற மாபெரும் அரசுதான இது.

எங்க ஜி மயில் வளத்தாரு, வாத்து வளத்தாரு; போதாமைக்கு அம்பானியவும், அதானியவும்  வளத்தாரு.  ஆனா, நாட்டு பொருளாதாரத்தை மட்டும் வளக்க மறந்துட்டாரு.
 

1 comment:

  1. நல்லதொரு திரைப்பட விமர்சனம். விமர்சனமுமம் ஒரு படைப்பே என்று சொல்வார்கள். அதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. விமர்சனத்தை நகைச்சுவை உணர்வுடன் எழுதியிருப்பது பாராட்டுதலுக்குரியது.திறந்த மனதுடன் எழுதப்பட்ட நேர்மையான விமர்சனம்.

    ReplyDelete