Sunday 19 July 2020

அதிசயங்கள் சூழ் உலகு

நம்ம நாடு  ...... அதாங்க இந்திய நாடு பல்வேறு ஆச்சரியங்களும், அற்புதங்களும் நிறைந்த நாடு.  மாபெரும் மகான்களும், பெரியோர்களும்  வாழ்ந்த நாடு.  இந்த நாட்டின் மக்கள் நல்வாழ்வு வாழ பல்வேறு காலங்களிலும், பல நூறு பெரியோர்கள் பாடுபட்டிருக்கிறார்கள்;  நல்வழி காட்டியுள்ளார்கள். இக்கட்டான பல சூழ்நிலைகளையும் வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது நம் நாடு.  பல்லாயிரக்கணக்கானோரின் தியாகமும் இதில் அடக்கம் என்பது முக்கியம்.  மொத்தத்தில் பல்வேறு அறிஞர்களின் வழிகாட்டுதலும், பல்லாயிரக்கணக்கானோரின் தியாகமும் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் நல்வாழ்க்கைக்கு அடித்தளமாகும்.  ஆனால், ஒரு கேள்வி இங்கே எழுகிறது.  நம்முடைய  இன்றைய நல்வாழ்வு நம் சந்ததிக்கு கிடைக்குமா;  அதற்கான கட்டமைப்புகள் இங்கே இருக்கிறதா;  நம்மை வழி  நடத்துவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் நம் ஆட்சியாளர்கள் நல்வழியில்தான் நம்மை செலுத்திக்கொண்டிருக்கிறார்களா;  சரியான வழியில் நம் பயணம் போய்க் கொண்டிருப்பதாக செய்தி ஊடகங்களில் கூவிக்கொண்டிருப்பவர்கள் சொல்வது உண்மையா.  நாம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிக்கிறோம்.

டாய் என்ன கலாய்க்கிற.  வழக்கமா நீ இப்படித்தான் எழுதுவியா அப்படின்னு நம்ம மனசாட்சி சவுண்டு குடுக்குதுங்க.  அதுனால சுருக்கமா நான் என்ன சொல்ல நெனச்சோனோ  அதை சொல்லிட்டுப் போயிர்றேன்.   அதாங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி "அதியங்கள் சூழ் உலகு"   அதை மட்டும் சொல்றேன் .  அதாகப்பட்டது, நம்ம நாட்டுல பல்வேறு மகான்கள் நிகழ்த்துன  அதிசயங்களுக்கு மேலான அதிசயங்கள் சில காலமா நடக்க ஆரம்பிச்சுருக்கு.
அதுல ஒண்ணு  ரெண்டு அதிசயங்களைப் பத்தி பாப்போம்.  எல்லாத்தையும் பேசணும்னு எனக்கு ஆசைதான்.  ஆனா இந்தப் பதிவு ரொம்ப நீளமா போயிரும்.  அதுனால......

மொதல்ல சில மாசத்துக்கு முன்னால நடந்தது.  இந்த கச்சா எண்ணெய்  அப்பிடிங்குற ஒரு மர்மமான திரவத்தை பத்தினது.  சீன வைரஸ்  - அதாங்க கொரோனா  -  ஆட்டத்த ஆரம்பிச்சதும், இந்த உலகமே  ஊரடங்கு அப்பிடிங்குற போர்வைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்ட காலத்துல கச்சா எண்ணெய்  அடிமாட்டு விலைக்கு விக்க ஆரம்பிச்சது.  அடிமாடுக்கு ஒப்பிடுறது கூட தப்பு;  அதோட இறைச்சிக்கு விலை இருக்கு.  ஆனா, கச்சா எண்ணெய்க்கு விலையே இல்லாமல் போச்சு;  அதுவும் தப்போ, negative price  அப்பிடிங்குற நிலைமைக்கு போயிருச்சு.  அதாவது, எண்ணையை வாங்கிக்கிறவனுக்கு, விக்கிறவன் பணம் குடுக்குற நெலம.  உலகம் பூரா பெட்ரோலும், டீசலும்  விலை பாதாளம் நோக்கி போயிட்டிருந்த நேரத்துலயும், இந்தியாவில மட்டும் விலை தாறுமாறா ஏறுச்சு.  இப்புடி ஒரு அதிசயம் எங்கயாவது நடக்குமா மக்களே.  அதுனாலதான் இது ஒரு அதிசய பூமியா இருக்கு.

இதுக்கு ஒப்பா இப்ப ஒரு அதிசயம் நடந்துருக்கு.  நான் மேல சொன்ன அதிசயம் கூட எல்லாருக்கும் தெரிஞ்சு நடந்த ஒண்ணு .  இப்பம் நடந்துருக்கே அதை நெனச்சாலே தலை சுத்துது.  கொரோனா பரவாம இருக்கணும்னா கை கழுவுறதுக்கு சோப்பு ரொம்ப முக்கியம்;  அது மாதிரிதான் சானிடைசரும்.  அது ரெண்டையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியல்ல  இருந்து நீக்கிட்டாங்க.  அதோட GST - யை 12 சதவீதத்துல இருந்து 18 சதவீதமா கூட்டிட்டாங்க.  என்னா ஒரு அதிசயம்.

உலகத்துல 150 நாடுகளுக்கு, கொரோனாவுக்கு எதிரா போராடுறதுக்கு நம்ம தாய்த் திருநாடு உதவி பண்ணிருக்காம்.  நாமெல்லாம் ரொம்பக் குடுத்து வச்சவங்க.  அதிசயங்கள் சூழ்ந்த உலகத்துல வாழறோமே.  

Saturday 11 July 2020

"ஏம்ல கு(கொ)திக்கிற"

ஏல  எவம்ல அது கூவிக்கிட்டே கெடக்கே.  ஊரு ஒலகத்தல என்ன நடந்தாலும்,  நம்ம சோலி முடிஞ்சாப் போதும்னு போயிரணும்ல.  அங்க இருக்கவன்லா அதிகாரத்துல இருக்கவன்.  அவன் நெனச்சா நம்மள என்ன வேணாலும் பண்ணலாம்.  அங்கன நடந்தத  பாத்தேலே, அப்பன் மவன் ரெண்டு பேரயும்  மொத்தமா இல்லாம ஆக்கிப் போடல.  நம்ம வயிறு நெரம்புச்சா;  நம்ம புள்ள குட்டி சொகமா  இருக்கா அப்புடின்னு  பாத்துக்கிட்டு மூடிக்கிட்டு கெடக்கணும் புரிஞ்சுதா.  ரொம்பயும் கெடந்து குதிக்காதலே.

அண்ணாச்சி நல்ல வார்த்த சொன்னீய; அப்புடித்தான் இம்புட்டு நாளும் நம்ம சனம் அத்தனையும்  கெடந்துச்சு.  ஆனா, இப்பம் நடக்குதுல்லாம் நல்லதுக்கா நடக்குங்கீய.  மொத்த சனத்தையும்  இப்புடி ஊரடங்குங்குற பேருல போட்டு அடச்சு  வச்சு என்னத்த சாதிக்கப் போறானுவ.  இங்க அம்புட்டு ஊருலயும்  கொரோனா வந்தாச்சு;  அது வார வரைக்கும் வழியத்  தொறந்து விட்டுப்புட்டு இப்பம் மூடி வெச்சு என்ன ஆகப் போகுது.  இந்த ஊரடங்குல கடை கண்ணியக்கூட அவிய சொல்லுற நேரம் மட்டும்தான தொறக்கணும்னு   சட்டம் போடுராகுலே அது செரியாங்கேன். அண்ணாச்சி, உங்களுக்கு தெரியாததுல்ல; என்னய  மாதுரி கெடயாது.  நாலும்  படிச்சவுக; நல்ல விசியம் தெரிஞ்சவுக.  ரெண்டு மணிக்கி கடைய சாத்தூணும்னாதான், அதுக்கு முன்ன சாமான் செட்டு  வாங்கிறணும்னு சனம் முண்டிக்கிட்டு போகும்;  எப்பயும் போல கடை தெறந்துருக்கும்னா, நாம எப்பம்  வேணாலும் போயி வாங்கிக்கிடலாம்னு கொஞ்சம் அடங்கிப் போகும்.  குறிச்ச நேரத்துக்குள்ள கடைய சாத்துனாத்தான், இந்த என்னமோ சொல்லுதாகளே தனி மனுஷ இடைவேளின்னு அதுக்கு வாய்ப்பே இல்லாமப் போகும்.  இதக்கூட அரசாங்கம் ப ண்ணுத அறிவாளிக யோசிச்சுப் பாக்க மாட்டாகளா.  என்னத்தையோ எம் புத்தில எட்டுச்சு, சொல்லிப்புட்டேன்.  

ஏல, இதலாம் எம் புத்திக்கி தோணலைங்கியா.  தோணுதுலே, ஆனா அம்புட்டையும் சத்தம் போட்டு சொல்லக் கூடாதுங்கேன்.  ஒன்னு கேக்குதவன் ஒன்னய சித்தம் செத்தவம்பான்.  இல்லாட்டி, இந்த இந்த மாதிரி ஒருத்தன் இந்தூருல பேசிக்கிட்டுத் திரியுதான்னு, சட்டம் பேசுதாம்பாரு அவன்கிட்ட போட்டுக் குடுப்பான்.  எட்டப்பன் பரம்பரையில  வந்தவனுவோ.  அம்மணக்காரன் ஊருல கோவணங்கட்டுதவன்  பைத்தாரன்.  புரிஞ்சுக்கோ.