சொக்கலிங்கத்தைப் பத்தி சொல்லியே ஆகணும். என்னோட முன்னாள் அறைத் தோழன். ஒரு எட்டடிக்கு எட்டடி அறையில் நான்கு பேர் தங்கியிருந்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த நேரம். நான், இளங்கோ, நாராயணன், சொக்கலிங்கம் என்று நால்வரும் சேர்ந்து அந்த அறையில் இரண்டு ஆண்டுகள் கழித்திருக்கிறோம். நாங்கள் நால்வரும் தொழில் பயிற்சி மேற்கொண்டிருந்த காலம் அது. கிடைக்கிற சம்பளத்தில் அந்த எட்டடி அறை கூட எங்களுடைய அரண்மனைதான். அறையிலேயே சமைத்து சாப்பிடுவோம்.
நால்வரில் சொக்கலிங்கம் ஒரு சமையற்கலை வல்லுனன். பெரும்பாலும் நாங்கள் மூவரும் சமைப்பதில் ஒன்றும் சுகம் இருக்காது. ஆனால், சொக்கலிங்கம் ஒரு பிறவி கலைஞன் - சமையலில். " அந்த சாம்பார்ல உப்பு கூடிப் போச்சுடே. ஒரு உருளைகிழங்க சேத்து வேக விடு", என்பான். நிச்சயமாக அந்த சாம்பார், உருளைக்கிழங்கு சேர்த்து வேக வைத்த பிறகு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும்.
ஒவ்வொரு முறை ஏதாவது எழுத வேண்டும் என்று உட்காரும்போதும் சொக்கலிங்கத்தின் நினைப்பு வந்து விடும். எனக்கென்னவோ இந்த எழுத்தும் ஒரு சமையல் போலத்தான் தோன்றுகிறது. காலம் காலமாக கற்ற மொழி, என் தாய்த்தமிழ், லட்சக் கணக்கான வார்த்தைகள் நிரம்பிய பாத்திரங்களில் எனக்கு முன்னால் இருப்பதாகத் தோன்றுகிறது; ஆனால் ஒரு சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து அதை சரியான விகிதத்தில் சமைப்பது என்பது எனக்கு இன்னும் கை வரவில்லை.
ஒரு வேளை சொக்கலிங்கம் இன்று இருந்தால், இந்த சமையலையும் (சாம்பாரையும்) சரி செய்திருக்கக் கூடும். சமையல் போலவே, எழுத்தை ரசிப்பதிலும் அவன் பெரிய ரசிகன்.
ஆரம்ப காலத்தில், நான் கவிதை சமைக்க முற்பட்ட காலங்களில், துருத்திக்கொண்டிருக்கும் வார்த்தைகளை அவன் சுட்டிக் காட்டுவான். "ஏ மக்கா, ஒனக்கு கவிதைலாம் சரிப்பட்டு வராதுலே. கதையா எழுது. இல்ல உரைநடையா ஏதாவது கிறுக்குலே", என்று வாழ்த்துவான்.
நானும் அப்பப்பபோ சமைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நான் நினைத்ததை முழுமையாக சொல்லி விட்டேனா என்று தான் தெரியவில்லை.
No comments:
Post a Comment