Saturday, 27 December 2025

அறிந்(த)தும் அறியா(ததும்)மலும்

 இன்றைய தேதிக்கு செய்திகளில் அதிகமாக அடிபடும் இடம் சபரி மலை. கட்டுக்கடங்காத பக்தர் கூட்டமும், திணறும் அரசின் கையறு   நிலையும்  விவாதப் பொருளாக இருக்கிறது.  தினமும் இரண்டு லட்சம் பக்தர்கள் வருகிறார்கள் என்ற செய்தி மலைப்பை தருகிறது.  அதனால்தான், இதற்க்கு அறிந்தும்,  அறியாமலும், என்று தலைப்பிட தோன்றியது. ஐயப்ப வழிபாட்டின் இறுதியில் இந்த அறிந்தும், அறியாமலும் என்று நடந்த தவறுகளுக்கு மன்னிப்பை கோரும் வழிபாடும் இடம் பெறும்.  ஆனால், அந்த ஐயப்ப தரிசனத்திற்கு செல்லும் முன் பின்பற்ற வேண்டிய சம்பிரதாயங்களுக்கு காரணம் என்ன, அவை சரியான முறையில் பின்பற்ற வேண்டிய தேவை என்ன என்பதெல்லாம் தெரியாமலே நாம் செய்து கொண்டிருக்கிறோம்.  அதிலொரு சம்பிரதாயத்தைப் பற்றிதான் இதில் பார்க்கப்  போகிறோம்.

ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பக்தர்கள் என்ற செய்தி மிகப் பெரிய மலைப்பை தருகிறது; எனக்குத் தெரிந்து நான் முதன் முதல் சபரி மலை சென்ற போது  (சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்) ஆண்டு முழுவதும் கூட ஐந்து முதல் ஆறு லட்சம் பக்தர்கள் வருவார்கள்.  அப்போதெல்லாம், நாம் கொண்டு செல்லும் அபிஷேக நெய், நாமே சன்னிதானத்தில் அபிஷேகத்திற்கு கொடுத்து, அந்த அபிஷேகத்தை நாமே கண்டு களிக்கலாம். அதன் பிறகு அந்த நெய்யில் ஒரு பகுதி நமக்கே பிரசாதமாக கொடுப்பார்கள்.  ஆனால், இப்போதெல்லாம் நாம் கொண்டு செல்லும் நெய் அங்கிருக்கும் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பின்னர் நமக்கு தேவையான பிரசாத நெய் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

நான் பிரிஸ்பேன்/ஆஸ்திரேலியா வந்த புதிதில் ஜெகதீஷ் அண்ணன் சபரி மலை சென்றார். அப்போது இருமுடி கட்டும் பூஜைக்கும் அழைத்திருந்தார். அப்போது நெய் அடைக்க வேண்டிய தேங்காய் கண் திறக்கப்பட்டு, இளநீர் முழுதும்  வடிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. ஆனால், தேங்காயின் வெளிப்புறம் நார், மற்றும் தூசு அப்படியே இருந்தது. இருமுடி கட்டித் தர வந்திருந்த  பெரியவர் அதனை சுட்டிக் காட்டி, அந்த தேங்காய் வெளிப்புறம் முழுவதுமாய் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், அல்லாது அது ஒரு பெரும் தெய்வ குற்றம் என்றும் சுட்டிக் காட்டினார். எனக்கு அதன் காரணம் (தேங்காயின் வெளிப்புறம் சுத்தம் செய்ய வேண்டிய காரணம்) தெரியுமாதலால், நெய் அடைத்த பின்பு கூட அதை சுத்தம் செய்து கொள்ளலாம், அதில் தவறில்லை என்று கூறினேன்.

நெய் அடைக்கும் தேங்காயின் வெளிப்புறம் மிகவும்  சுத்தமாக சுரண்டி எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நாம் சன்னிதானம் சென்று தேங்காய் உடைத்து நெய்யை வெளி எடுக்கும் போது, அந்த நார் அல்லது தூசு நெய்யுடன் கலந்து விட வாய்ப்பு இருக்கிறது.  அதைத் தவிர்ப்பதற்காகத்தான்  தேங்காயை சுரண்டி சுத்தமாக வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அதைத் தவிர்த்து அதில் தெய்வ குற்றத்திற்கான காரணம் ஏதுமில்லை என்று எடுத்துக் கூறிய பின்பு, நெய் அடைத்து முடித்த பின்பு தேங்காயின் வெளிப்புறத்தை சுத்தம் செய்து இருமுடியில் காட்டினார்.

இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே; இதே போல் பல்வேறு நடைமுறைகளும் இன்றும்  காரணம் தெரியாமல், சாஸ்திரங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் என்ற  பெயராலும் தெய்வ குற்றம் என்ற பெயராலும் அர்த்தமில்லாமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு சில நடைமுறைகள், இன்றைய நம்முடைய வாழ்க்கை முறைக்கு தேவையில்லாத/ஒத்துவராத (காண்ட்ராக்டர் நேசமணி வார்த்தையில் கூறினால் தேவையில்லாத ஆணிகள்) சம்பிரதாயங்களையும் சுமந்து கொண்டிருக்கிறோம்.  அந்த தேவையில்லாத ஆணிகள் எவை என்று அடுத்த முறை பார்க்கலாம்.   


Monday, 22 December 2025

ரத்னா பெரியம்மா

 நிறைய முறை நாம சொல்லி இருந்தாலும்,  திரும்ப சொல்றதுல  எந்த தப்பும் இல்லை.  மனம் ஒரு குரங்குன்னு பாடியவர் நிச்சயமா உணர்ந்துதான் பாடி இருக்கிறார்.  ஒரு இடத்துல அல்லது விஷயத்துல நில்லாம ஓடிக்கிட்டே இருக்கிறது இந்த மனம்.

மனம் பத்தி பேசும் போது, மணம் நினைவுக்கு வருது.  சமீபத்துல என் மகள் திருமணம் சுற்றத்தார் ஆசியும், இறைவனின் அருளும் கூடி   நடந்தது.  ஒரு தகப்பனா மனம் இளகிய நேரம் அது.  திருமணம் முடிந்ததும், நண்பர் கூட்டம் அனைவரும் ஒன்று சேர்ந்தாற்போல், திருமணத்தை நான் சிறப்பாய் நடத்தி விட்டதாய் பாராட்டினார்கள். அந்த நண்பர்கள் உதவி தான்  திருமணம் நடந்தேறியது என்பதே உண்மை.  நிச்சமாய் நான் நல்ல நண்பர்கள் சூழ இருக்கின்றேன் என்ற எண்ணமே ஒரு நிம்மதி உணர்வை தருகிறது.

கல்யாணத்திற்கு முதல் நாள், திருமண மேடை உள்ளிட்ட அலங்காரங்கள் முடிந்து எல்லோரும் போன பின்பு, நானும் திரு. நடராஜனும் உட்கார்ந்து திருமண நடைமுறைகள், சாஸ்திரங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் (திரு. நடராஜன் கொங்கு சமூகம் சார்ந்தவர்; அங்கு இந்த சம்பிரதாயங்களை சாங்கியம் என்று கூறுவார்கள்) குறித்தெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சின் இடையில் எனக்கு ஏனோ ரத்னா பெரியம்மா ஞாபகம் வந்தது.  அவரிடம் அது குறித்து அப்போது பேசவில்லை என்றாலும், இப்போது இந்த கிறிஸ்துமஸ் விடுப்பில் நம்ம Blog ல் கிறுக்கி ரொம்ப நாள் ஆகிவிட்டதால் அது குறித்து கிறுக்கலாம் என்று தோன்றியது.

ஏனோ தெரியவில்லை, ரத்னா பெரியம்மா ஞாபகம் வருகிறது.  ரத்னா பெரியம்மா பற்றி பேச வேண்டுமென்றால், ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி முதலில் சொல்ல வேண்டும்.  என் அம்மாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சொந்த ஊர்.  நான் பிறந்தது அங்கேதான்.  என் அம்மாச்சி வீடு இருக்கும் கீழப்புதுத் தெரு முழுதும் எங்கள் சொந்தங்கள்தான். அது மட்டுமல்ல; கீழத்தெரு, பிள்ளைமார் தெரு, போஸ்ட் ஆபீஸ்  தெரு  இப்படி ஒரு ஏழெட்டு தெருக்கள் முழுக்க பிள்ளைமார் மட்டுமே.  அநேகமாக அனைவருமே ஒருவருக்கொருவர் சொந்தம் தான்.  எங்கள் அம்மாச்சி வீட்டுக்கு எதிர் வரிசையில் என் அத்தை வீடு; என் அப்பாவுக்கு அக்கா வீடு.  இதனால், எங்களின் பள்ளி விடுமுறைகள் அனைத்தும் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே கழிந்தது.  எங்கள் அத்தை வீட்டிலிருந்து அநேகமாக ஒரு பத்து வீடு தள்ளிதான் ரத்னா பெரியம்மா வீடு.  அவர் எனக்கு எந்த முறையில் பெரியம்மா என்றெல்லாம் எனக்கு தெரியாது; என் அம்மாவுக்கு அக்கா முறை என்பதால் எனக்கு பெரியம்மா, அவ்வளவுதான்.

தூரத்து சொந்தமானாலும், விடுமுறைக்கு ஊருக்கு செல்லும்போதெல்லம் பெரியம்மா பாசமாய் பேசுவார்.  அவர் மட்டுமல்ல, அந்த வீட்டில் செல்லா அக்காவும் கூட பாசமாய் இருப்பார்.  அவர்கள் வீட்டிலிருந்து நாலாவது வீடு பெரியம்மா பிறந்த வீடு. பெரியம்மாவின் அப்பா, அம்மா காலத்திற்கு அப்புறம் பெரியம்மாவின் அண்ணன் வீடு.  எல்லோரிடமும் பாசம் காட்டும் ஒரு அற்புதப் பிறவி பெரியம்மா.  அண்ணன் மற்றும் அண்ணியிடம் அவ்வளவு அன்பு மற்றும் உரிமை கொண்டாடுவார்.  ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது, "வரிசையாரு  என்ன சமையல்; அண்ணன் சாப்பிட்டாச்சா; வயலுக்கு போயிட்டாகளா," என்று ஏதாவது ஒரு கேள்வியுடன் அண்ணன் வீட்டிற்கு போய்  வருவார் பெரியம்மா. (எங்கள் இனத்தில் அண்ணியை வரிசையார் என்றுதான் அழைப்பார்கள்) 

எல்லாமும் நன்றாய் போய்க் கொண்டிருந்த நிலையில், பெரியம்மா அவர்கள் அண்ணன் வீட்டிற்குப் போவதை அறவே நிறுத்தும் ஒரு காலம் வந்தது.  காரணம் மிகவும் விசித்திரமானது.  

பெரியம்மா பெண் செல்லா  அக்காவுக்கும், பெரியம்மா அண்ணன் மகனுக்கும் திருமணம்  பேசி முடித்தார்கள்.  வழமைப்படி பெண் வீட்டில்தான் திருமணம்; மாப்பிள்ளை வீட்டார் என்றோ, அல்லது பெண் வீட்டார் என்றோ எந்த வித்தியாசமும் இன்றி எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்றாய் நின்று திருமணத்தை சிறப்பாய் நடத்தினார்கள்.  திருமணம் முடிந்து மணமகள் புகுந்த வீட்டிற்கு போகும் நிகழ்வுக்கு, பெண்ணின் பெற்றோர் உடன் போகும் வழக்கம் கிடையாது என்பதால், செல்லா அக்காவின் சித்தப்பா, சின்னம்மா உடன் சென்றார்கள்.  அதன் பிறகு மறுவீடு அழைக்க ஒரு முறை ரத்னா பெரியம்மாவும், பெரியப்பாவும்  அவர்கள் வீடு சென்றது மட்டுமே நடந்தது.  மறுநாளிலிருந்து அண்ணன் வீட்டிற்கு செல்லும் வழக்கத்தை பெரியம்மா அறவே நிறுத்தி விட்டார்கள்.  அக்கம் பக்கத்தார் ஏன் என்று கேட்டதற்கு பெரியம்மா சொன்ன பதில் தான் விசித்திரம்.

"நான் அண்ணன் வீட்டுக்கு சும்மா போனாலும், என் பெண் எப்படி இருக்கிறாள் என்று பார்ப்பதற்குத்தான் நான் வந்ததாக எங்க அண்ணனும், வரிசையாரும்  நினைத்து விடக் கூடாது.  அது மட்டுமல்ல, செல்லாவையும் அடிக்கடி வீட்டுக்கு வரக்கூடாது; அப்படி வர வேண்டி இருந்தாலும், மாமா அல்லது அத்தையிடம் சொல்லிவிட்டுத்தான் வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்."

 

Tuesday, 4 June 2024

"அத்தான், பாத்துக்கலாம் அத்தான் "

 இந்த நேர்மறை வார்த்தைகளை என்னிடம் இனி யார் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.  யாரேனும் உதவி என்று கேட்டால், உன்னுடைய பாதம் எப்போதும் ஓரடி முன்னே இருக்கும்.  சில சமயம் நான் ஏதேனும் ஒரு வேலையை கடினமானதாக இருக்கும் என்று கணித்து உன்னிடம் ஆலோசனை கேட்டால் உன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், "வாங்கத்தான் பாத்துக்கலாம்".

எவருக்கும் இருப்பது போல் உனக்கும் குறைகள் இருந்தன; உன் குறைகளை மட்டுமே சீர் தூக்கிப் பார்த்துப் பேசும் நாக்குகள் இருந்தன, இருக்கின்றன.  ஆனால் எனக்கு மட்டும் உன்னுடைய நிறைகள் மட்டுமே தெரிந்தன.  ஏன் என்று தெரியவில்லை; மைத்துனன் என்ற உறவையும் தாண்டி உனக்கும், எனக்குமான உறவுக்கு என்ன பெயர் வைப்பதென்று எனக்கு புரியவில்லை.  

இன்று நீ இல்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ள இயலாத ஒவ்வொருவருக்கும் நான் ஆறுதல் வார்த்தைகளை பரிசளித்துக் கொண்டிருக்கிறேன்.  அழுவதால் பயனில்லை என்று அவர்களை தேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.  உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கும் எனக்கு என்னவோ என்னருகிலிருந்து நீ, "அத்தான், விடுங்க பாத்துக்கலாம் அத்தான்", என்று ஆறுதல் கூறுவது போல் கற்பனை உலகத்தில் இருந்து கொண்டிருக்கிறேன்.  

அதெப்படி ஒரு மனிதனுக்கு இத்தனை தொடர்புகள் இருக்க முடியும்; அதெப்படி ஒரு மனிதனால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை வைத்துக் கொண்டிருக்க முடியும் என்றெல்லாம் நான் பார்த்து வியந்த மனிதர்கள் ஒரு சிலரே.  அந்த வியப்புக்குரிய மனிதர்களில் நீயும் ஒருவன். 

நீயில்லாத அந்த மதுரையை நான் இனி எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் சங்கர்.

Wednesday, 24 April 2024

ஸ்ரீ சித்தானந்தா சரணம்

சற்றே நீளமான பதிவு.  மேலும், இந்தப் பதிவை முழுமையாக படித்து முடிக்கும் போது உங்களுக்கு பல்வேறு மனநிலை தோன்றலாம்.  கோபம் வரலாம்; எரிச்சல் தோன்றலாம்.  ஒருவேளை, இந்தப் பதிவை எழுதிய நான் அருகில் இருந்தால் நான்கு அறை விடலாம் என்று கூட தோன்றும்.  ஆனால், அத்தனை மன மாச்சரியங்களையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்.

 பல்வேறு சித்தர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஏன், பழனி மலையில் வீற்றிருக்கும் அந்தக்  கோவணாண்டியை உருவாக்கி, பிரதிஷ்டை செய்தவரும் ஒரு சித்தர்தான்.  நவபாஷாணங்களைக் கொண்டு போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த மூலவருக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இன்று பலரும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் ஜோதிடம் என்ற கலையுமே புலிப்பாணி என்ற சித்தர் உருவாக்கியதாக சொல்கிறார்கள்.  சித்தர்கள் மொத்தம் பதினெட்டு பேர் என்று சொல்லப்படுகிறது.  அந்த சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருவதாகவும், அவர்களை அத்தனை எளிதாக யாரும் பார்த்து விட முடியாது என்றும் சொல்கிறார்கள்.  பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாக சொல்லப்படும் அந்த சித்தர்களில், அசத்திய விலக்க  சித்தர் என்ற ஒரு சித்தரைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

இந்த சித்தரின் சன்னிதானம், நாகருக்கு ஆலயம் கொண்ட நாகர்கோவிலிலிருந்து சுமார் 342 கிலோமீட்டர்கள் தென்கிழக்காக பயணம் செய்தால் சென்றடையலாம்.  சற்றே கடினமான பாதை என்பதால் நல்லதொரு நம்பகமான வாகனம் வேண்டும்.  இந்த சித்தரின் சன்னதியில் வழங்கப்படும் ஒரு சிறப்பு பிரசாதம் பல்வேறு அற்புதங்கள் கொண்டது.  

அசத்திய விலக்க சித்தரின் பெயரிலேயே அவரின் சிறப்பு சொல்லப்படுகிறது.  இவரின் சிறப்பு பிரசாதம் பெற்றவர்கள் பொய்யை, பொய் பேசுபவர்களை மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். (அ சத்தியம் - பொய்) அது மட்டுமன்றி மாற்று கருத்து கொண்டோரை கிள்ளுக் கீரையாக நினைத்து மிரட்டல் மற்றும் நக்கல் மூலம் அவர்களை அடக்கிவிடலாம் என்று எண்ணுபவர்களுக்கு நல்லறிவு கிட்டும்.  முக்கியமாக சங்கிகளுக்கு நல்லதொரு சாப விமோசன ஸ்தலம் இது.  மோடி என்ற பொய் பிம்பத்தை நம்பிக்கொண்டிருப்போருக்கு அது ஒரு மண் குதிரை என்பதை எடுத்துரைக்கும்.  மொத்தத்தில் படிப்பறிவிருந்தும், அறிவிலியாய் போனோருக்கு உண்மை எடுத்துரைக்கும் அற்புத ஸ்தலம் இது.

(பின் குறிப்பு: நாகர்கோவிலில் இருந்து தென் கிழக்காக 342 கிலோமீட்டர் அப்படின்னு சொன்ன உடனே புரிஞ்சுகிட்டு யாராவது சுதாரித்திருந்தால் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  ஏன்னா அது நடுக்கடல்) 




Tuesday, 26 March 2024

ஏன் மோடிக்கு/பாஜகவுக்கு ஓட்டுப் போடணும்.

இதுவரைக்கும் மோடியையும்/பாஜகவையும் ரொம்பத்தான் கழுவி ஊத்திட்டமோன்னு ஒரு குற்றவுணர்ச்சி வந்துட்டதால, கொஞ்சம் ஆழமா/அகலமா சிந்தனைய தூண்டி விட்டேன். அது பாத்தா எங்கங்கையோ போகுது. அப்படியோ போனத இழுத்துப்பிடிச்சா ...... முடியல. அதான் முடிஞ்சவரைக்கும் மோடிக்கு ஆதரவா ஒரு பதிவு. இதுலயும் குத்தம் குறை ஏதும் இருந்தா உங்க வீட்டுப் பிள்ளையா என்னை நெனச்சு மன்னிக்கணும்னு கேட்டுக்குறேன்.

 மொதல்ல மோடியோட ஒரு சாதனைக்கு நாம எல்லாரும் ஒரு வணக்கம் வச்சே ஆகணும்.  2014-ல இருந்து 2024 வரைக்கும் கோடிக்கணக்கானவர்களை நம்ப வச்சு ரெண்டு தேர்தல் ஜெயிச்சுருக்காரே அதுவே ஒரு பெரிய சாதனை.  இன்னும் சில, பல கோடி பேரு  அவரை அப்படியே நம்பிக்கிட்டு இருக்கிறதுதான் மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த சாதனை.  வெறும் பொய்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பத்தை  எப்படி ஐயா நம்புறீங்க அப்படின்னு நானும் பல பேரை கேட்டும் சரியான பதில் கிடைக்கலை. அப்புறம் அவரோட சாதனைகளை பட்டியலிட்டு ஒட்டு கேப்போம்.

மொதல்ல விலைவாசி உயர்வு; 400 ரூவா சிலிண்டர் 1000 ரூவாவாச்சு; அம்பது ரூவா பெட்ரோல் 100 ரூவாவாச்சு;  20 ரூவா அரிசி 80 ரூவாவாச்சு; எல்லாம் போக அமெரிக்கா டாலர் pole vault சாதனை படைச்சது.  எதிர் கட்சிகள் எல்லாம் சேர்ந்து நாக்கை பிடுங்குற மாதிரி கேள்வி கேட்டும், நம்புற மாதிரி எப்பவாச்சும் பதில் சொன்னாரா? அப்படியே சொன்னாலும் 75 வருஷம் பின்னால போயி நேருவைத்தான் கை காமிச்சாரு.  ஒரே ஒரு தடையாவது பத்திரிக்கைகளை சந்திச்சு பதில் சொல்லிருக்காரா?  கடைவாய்ப் பல்லு  வரைக்கும் கடிச்சுக்கிட்டு அமைதி காத்திருக்காரு.  அந்த சாதனைக்காகவாவது அவருக்கு ஓட்டுப் போடணும்னு பணிவோட கேட்டுக்கிறேன். அதும் போக, ஏதோ போனாப்  போகுதுன்னு சில பல ரூவா விலையை குறைச்சிருக்காரே, அம்மாடி எவ்வளோ பெரிய சாதனை.

சில, பல லட்சம் கோடிகள் - 100 லட்சம் கோடின்னு சொல்றாங்க - கடன் வாங்கிருக்காரு.  அவரென்ன கடன் வாங்கி சொந்தமா சொத்து பத்தா வாங்குனாரு; அதானிய உலக பணக்காரர்கள் பட்டியல்ல சேத்துருக்காரு. இது ஒரு குத்தமாய்யா. இந்த அமலாக்கத்துறை, சிபிஐ  மாதிரி பலப் பல துறைகளை எப்படில்லாம் பயன்படுத்தி தன்னோட சொந்தக் கட்சிக்கு ஆயிரக்கணக்கான கோடி பணம் சேக்குறதுன்னு எப்படின்னு மத்தவங்களுக்கு ஒரு உதாரண புருஷரா இருந்துருக்காரு.

அத்வானி காலத்துல இருந்து பூச்சாண்டி காமிச்சாங்களே ராமருக்கு கோயிலுன்னு; இவரு எவ்வளவு விவரமா பாஜக - வுக்கு ஒரு பிரச்சார தலைமையகம் கட்டி அதுக்கு ராமர் கோயிலுன்னு பேரு வச்சு எவ்வ்வ்வ்ளோ பேரை முட்டாள் ஆக்கிட்டாரு.  அடேங்கப்பா, இதுக்கு மேல என்னய்யா சாதனை வேணும்.

ஒருவேளை, எதிர் கட்சி தரப்பு இந்தத் தேர்தல்ல ஜெயிச்சு ஆட்சிக்கு வந்துட்டா என்னல்லாம் விபரீதம் நடக்கும்னு கற்பனை பண்ணி பாத்தேன்.  அப்போ இந்த முந்தைய மோடிக்கள் அல்லது மல்லையா மாதிரி அதானியும், அம்பானியும் நாட்டை விட்டு ஓடிப் போறதுக்கு வாய்ப்பு இருக்கு.  அப்படி நடந்துட்டா, இந்த ஸ்டேட் பேங்க் ஆப் வட்டிக்கடையை நம்ம ஜி சுரண்டியெடுத்து குடுத்த காசெல்லாம் திரும்பி வராது. அதும் போக, அதானிக்கு பட்டா போட்டுக் குடுத்த துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் எல்லாம் என்னாகும்னு தெரியாது.  

மேற்சொன்ன காரணங்கள்ல உள்ள நியாய, அநியாயங்களை நீங்களே எடை போட்டுப் பாத்து ஒட்டுப் போடுங்க மக்களே.


  

 

 

 

 

 

Friday, 22 September 2023

எனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் தோணுதா!

 ஒரு ஊருல ஒரு மனுசன் (வேற எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல).  ஊருக்குள்ள ஓரளவு நல்ல பேரு; அதும் போக கொஞ்சம் கை வைத்தியமும் தெரியும்.  சின்னச்சின்ன உடல்நலக் குறைவுக்கெல்லாம் கை வைத்தியம் பாப்பாரு.  போக நல்லது, கேட்டது எதுன்னாலும் இவருகிட்ட எல்லாரும் வந்து ஆலோசனை வேற கேப்பாங்க.  விஷயம் என்னன்னா, இவருக்கு மனைவி கிடையாது;  தவறிட்டாங்க.  ஒரே மகன்; பையனுக்கு தாயில்லா குறை தெரியாம வளத்தாரு.  பையனும் வளந்துட்டான்.  இந்த நிலையில இவரு தொலை தூரம் போகிற ஒரு வேலை வந்துச்சு.  பையனை தனியா விட்டுட்டு போகணுமேன்னு கவலை.  ஊருல எல்லாருகிட்டயும் பையனை பாத்துக்குங்கன்னு சொன்னாரு.  எல்லாரும் ஒண்ணு சொன்னாப்புல கண்டிப்பா பாத்துக்கிறோம்னு உறுதி குடுத்தாங்க.  "எங்க குடும்பத்துல ஒருத்தரா பாத்துக்கிறோம்;  எங்க வீட்டுலயே சாப்பிட்டு எங்க வீட்டுல ஒரு ஆளா இருக்கட்டும்",  அப்படின்னு எல்லாரும் சொன்னாங்க.  இவருக்கும் சந்தோஷம்.  மகனைக் கூப்பிட்டு, "மகனே இந்த ஊருல ஒவ்வொரு வீட்டுலயும் நமக்கு ஒரு வேளை சாப்பாடு இருக்கு.  அதை விட்டுறாத", அப்படின்னு சொல்லிட்டு ஊருக்குப் போனாரு.

ஊருக்குப் போனா, போன மாதிரியே இருக்க முடியுமா;  போன வேலை முடிஞ்சு மனுஷன் திரும்பி வந்தாரு.  ஊருல ஒரு ஆளு கூட இவருகிட்ட முகம் குடுத்து பேச மாட்டேங்கிறாங்க.  இவருக்கு ஒண்ணும் புரியல; பையனைக் கூப்பிட்டு என்ன விவரம்னு கேட்டாரு.  பையனும், "நீங்க ஊருக்குப் போனதில இருந்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வீட்டுல சாப்பிட்டேன்", அப்படின்னு சொன்னான்.  "ஏல கூறு கெட்டவனே.  ஒவ்வொரு வீட்டுலயும் நமக்கு சாப்பாடு இருக்குன்னா, அதுக்கு அந்த அளவு மரியாதை இருக்குன்னு அர்த்தம். அந்த மரியாதையை விட்டுறாதன்னு சொன்னேன்.  நீ மொத்த மரியாதையையும் கெடுத்து வச்சிருக்க", அப்படின்னு வருத்தப்பட்டார்.    

அதே மாதிரிதான் இங்கயும் நடந்துருக்கு; ஊரான் வீட்டு நெய்யே அப்படின்னு (முழுசா சொல்ல முடியாத சொலவடை அது) நெனச்ச நேரமெல்லாம், எடுறா ஏரோபிளானை அப்படின்னு ஊரு ஊரா/நாடு நாடா சுத்துனாரு நம்ம ஜி.  இதுல எல்லா நாட்டு தலைவரும் இவருக்கு ரொம்ப மரியாதை குடுக்குறாங்க; இவருக்கு எல்லாரும் நெருங்கிய நண்பர்கள் அப்படின்னெல்லாம் வடை சுட்டு, சுட்டு சுட்டாங்க;  இப்ப எல்லா வடையும் ஊசிப் போச்சு.  

இங்க ஜி20 மாநாடு முடிச்சு போற வழியில, இந்தியாவுல பத்திரிகை சுதந்திரமே இல்லைன்னு பேட்டி குடுத்துட்டுப் போறாரு ஜோ பைடன். இப்போ கனடா பிரச்சினை பத்திக்கிட்டு எரியுது.  போதாமைக்கு இந்த சீனாக்காரன் வேற விளையாட்டு வீரர்களுக்கு விசா குடுக்க முடியாதுன்னு ஒரு குண்டைப் போடுறான்.  என்னாடா விஷயம்னா அருணாச்சலப்பிரதேசம் ஏற்கனவே சீனாவோட ஒரு பகுதிதான்.  அங்க இருந்து வாரவனுக்கு நான் ஏண்டா விசா குடுக்கணும்னு கேக்குறான்.  ஏற்கனவே, அருணாச்சலப்பிரதேசத்துல சீனா எல்லை தாண்டி வந்துட்டான்னு ராகுல் சொன்னப்போ, அப்படி ஒண்ணு நடக்கவே இல்லை.  எங்க அம்பத்தாறு இன்ச் பிரதமர் ஆட்சியில ஒரு இன்ச் நிலம் கூட நாங்க விட்டுக் கொடுக்க  மாட்டோம்னு வீர வசனம் பேசினாங்க.  அதெல்லாம் இப்போ ஞாபகத்துக்கு  வந்து தொலைக்குது.  மொத்தத்துல அடுத்த வீட்டு விருந்தும், நட்பும் நாம ரொம்ப நெருங்கிப் போனா விலகிப் போகும். ஏன்னா, ரொம்ப நெருங்கினா நம்ம பலவீனம் பல்லிளிச்சிரும்.  அப்படித்தான் நம்ம ஜி-யோட பலவீனம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கு.  

வழக்கம் போல ஒரு சந்தேகம்.  எதிர்க்கட்சி கூட்டணி இந்தியா அப்படின்னு பேரு வச்சதும், நாட்டோட பேரையே பாரத்னு மாத்துறேன்னு கெளம்பிட்டாங்க. கேட்டா, இந்தியா அப்பிடிங்கிற பேரு வெளிநாட்டுக்காரன் குடுத்தது அப்படின்னு கம்பி கட்டுறீங்களே எசமான்.  இந்த மின்சாரம், கார், ட்ரெயின், ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன், கம்ப்யூட்டர், ஊரான் வீட்டு காசுல வாங்கிட்டு ஏறி சுத்துறீங்களே அந்த ஏரோபிளேன் எல்லாமே வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிப்புதானே எசமான்.  எல்லாத்துக்கும் மேல, இந்த ஆஸ்பத்திரி, அங்க வைத்தியம் குடுக்குற டாக்டருங்க, அவங்க படிப்பு எல்லாம் வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிப்புதான்; போதாமைக்கு இப்ப இருக்குற மூத்த, சிறப்பு வைத்தியம் குடுக்கிற டாக்டருங்கல்லாம் நீங்க கொண்டு வந்த நீட் தேர்வு எழுதாதவுங்க.  அப்ப  உங்களுக்கு உடம்புக்கு ஒரு நல்லது, கெட்டது  வந்தா நீங்க ஆஸ்பத்திரிக்கு போக மாட்டீங்களா எசமான்? 

Thursday, 24 August 2023

மாப்பிள்ளை முறுக்கு

 எங்க ஊர்ப்பக்கம் முந்தி நடந்த ஒரு சம்பவம் இது.  ஊருல பெரிய பண்ணையார்; அவ்ளோ பெரிய மனுசனா இருந்தாலும், கொஞ்சம் நல்லவரு கூட.  (எத்தனை பணக்காரன் நல்லவனா இருக்கான்னு தெரியல)  இவருக்கு ரெண்டு பொண்ணு, ரெண்டு பையன்.  ரெண்டு பொண்ணுக்கும் நல்ல வசதியான இடமா பாத்து கல்யாணம் பண்ணிவைச்சாரு.  சின்ன பொண்ணுக்கு தலை தீபாவளி; சம்பந்தி வீட்டுக்கு வில்லு வண்டி அனுப்பி வச்சு பொண்ணு, மாப்பிள்ளையை அழைச்சாரு.  அவங்களும் வண்டியேறி வந்தாங்க.  வண்டி பண்ணையாரு ஊருக்கு வந்துருச்சு;  வீட்டு வாசலுக்கு வண்டி வந்து நின்னுச்சு.  சந்தர்ப்ப வசமா பக்கத்து ஊருல ஒரு பிரச்சினைக்கு தீர்வு சொல்ல பண்ணையாரு போயிருந்தார். பண்ணையார் மனைவியும், ரெண்டு  பையன்களும் வாசலுக்கு வந்து மாப்பிளையை வரவேற்றாங்க.  என்னய்யா அதிசயம், மாப்பிள்ளை முகத்தை திருப்பிக்கிட்டாரு; என்னன்னா பண்ணையார் நேருல வந்து வரவேற்க்கணுமாம்.  அப்பத்தான் வண்டியை விட்டு இறங்குவேன்னு சொல்லிட்டாரு.  ஏன்னா ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பெரிய மாப்பிளையை நேரடியா பண்ணையாரு வந்து கூட்டிட்டு போனாருன்னு இந்த மாப்பிளை பையனுக்கு யாரோ சொன்னாங்களாம், அப்புறம் யாராரோ வந்து சமாதானம் பண்ணி, வீட்டுக்குள்ள கூட்டிட்டு போனாங்களாம்.

இங்க ஒருத்தரு அந்த மாப்பிளை முறுக்குக்கு இணையா, ஏரோபிளேனுக்குள்ள உக்காந்துக்கிட்டு இறங்க மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்காரு.  கடைசியில போனா போவுதுன்னு துணை அதிபர் வந்து கூட்டிட்டு போனாராம்.  என்ன வித்தியாசம்னா, பண்ணையார் மாப்பிளைக்கு வண்டி அனுப்பிச்சு கூப்பிட்டாரு. இவரு மக்கள் வரிப்பணத்துல ஏரோபிளேன் வாங்கிட்டு போறாரு.  இதுல பண்ணையாரு காதுக்கு, மாப்பிளையோட முரண்டு விஷயம் போனதும், அவரு கெட்ட வார்த்தையில திட்டுனதையெல்லாம் இங்க சொல்ல முடியாது. இவருக்கு என்னவெல்லாம் திட்டு விழுந்துச்சுன்னு யாருக்கு தெரியும்.  அதும் போக மாப்பிள்ளையை தீபாவளிக்கு அழைக்கிறது சம்பிரதாயம்.  இவரை எதுக்கு மாநாட்டுக்கு அழைச்சாங்கன்னு யோசிச்சு பாக்கணும். நாலு நாட்டு அதிபருங்க சேர்ந்து முக்கியமான சமாச்சாரங்களை யோசிச்சு பேசுவாங்க; எல்லாரும் மொத்தமா முட்டு குடுத்து பேசிக்கிட்டே இருந்தா ஒரு அயர்ச்சி வரும்ல; அப்ப ஒரு கோமாளி இருந்தா பொழுது நல்லா போகும்னுதான் இந்தாளையும் கூப்பிட்டு வச்சுக்கிறது ஒரு பழக்கமா போச்சு.  அதுவும் ஊரான் காசுல வாங்குன பிளேன் இருக்குன்னு சும்மா, சும்மா சுத்திக்கிட்டே இருந்தா எவன் மதிப்பான்.  அமெரிக்க பாராளுமன்றத்துல பேசுனாருன்னு பெருமை பேசுற ஊடகம் ஏதாவது, அந்த பாராளுமன்றத்துக்கு எதுத்தாப்புல Crime Minister of India அப்படின்னு டிஜிட்டல் போர்டு வச்சதை பத்தி பேசுச்சா.  ஏன், இதே  தென்னாப்பிரிக்காவுல நம்ம "ஜி"யை டிராகுலா அப்படின்னு சித்தரிச்சு படம் வச்சாங்களே அதை யாராவது பேசுனாங்களா. 

இவரு பிரிக்ஸ் மாநாட்டுக்கு போனதுல ஒரே ஒரு சாதகமான விஷயம், நம்ம விண்வெளி விஞ்ஞானிகள் சந்திரயான் 3 யை பத்திரமா நிலாவுல தரையிறக்கிட்டாங்க.